vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

முன்னோடிகள்: மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர்

சிவகங்கைக்கு அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்தில் 1888-ம் ஆண்டு பிறந்தார் சுப்பராம பாகவதர். இவரது தந்தை தமிழ் பண்டிதர். தாய்வழிப் பாட்டனார் சிதம்பர பாகவதர் சிறந்த சங்கீத ஞானமும், தமிழ்ப் புலமையும் வாய்ந்தவர்.சுப்பராமன் சங்கீதத்திலும் தமிழிலும் நல்ல பயிற்சி பெற்றார். கட்டையான சாரீரம். கடும் பயிற்சி மூலம் அதை பண்படுத்திக் கொண்டார்.பல வித்வான்களிடம் பயின்று சங்கீத ஞானத்தை விருத்தி செய்துகொண்டு சங்கீத சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றார்.தெலுங்கு, சம்ஸ்கிருதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு சரிசமமாக தமிழிலும் கீர்த்தனைகள் தேவை என்பதை உணர்ந்தார். இதன் விளைவாய் தமிழில் கீர்த்தனைகளையும் பதங்களையும் புனைந்தார்.இசைக் கச்சேரிகள் செய்து பணம் ஈட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ராகத்தின் நுணுக்கங்களை அலசி ஆராயும் இசை அறிவு கொண்டவராக இருந்தார்.  தனித்தன்மையுடன் நிரவல் ஸ்வரம் பாடுவார்.இராமநாதபுரம், மைசூர், திருவனந்தபுரம் ஆகிய சமஸ்தானங்களில் பாடி பாராட்டும் பரிசும் பெற்றார்.வித்வான் புஷ்பவனம், காயகசிகாமணி முத்தய்யா பாகவதர் போன்றோரிடம் நட்பு பாராட்டினார். கர்நாடக சங்கீதம் தழைத்தோங்க வேண்டும் என்றால் இசைக் கலைஞர்கள் மாதம் ஒருமுறை கூடி அவரவர் மனோதர்மப்படி பாட வேண்டும், மக்கள் அவற்றைக் கட்டணம் இன்றி கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.இவர் பாடும் ராக ஆலாபனங்களையும் ஸ்வரங்களையும் கேட்ட பல வித்வான்கள் இவருடைய இசையினால் உந்தப்பட்டனர். பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் இசை அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவே இசை பயின்றார். 1943-ம் வருடம் சங்கீத வித்வத் சபைக்குத் தலைமை தாங்கினார்.

01 Jan 2010 02:46:23 AM IST
நன்றி: தினமணி 
 
 

No comments:

Post a Comment